வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 year ago


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த சந்திப்பானது நாளைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது.

வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத்துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அத்துடன், இன்றையதினம்(13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடத்தில் நேரடியாக எழுத்து மூலமாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வடக்கு மருத்துவத்துறையை ஊழல் மோசடிகளில் இருந்து காப்பாற்றுவார்களா என்ற ஆவல் மக்களிடத்தே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அண்மைய பதிவுகள்