பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.-- வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு





பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், ஒவ்வொரு அழகக நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண அழகக சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24.01.2025) இடம்பெற்றது.
வடக்கு மாகாண அழகக சங்கத்தினரால் பல்வேறு விடயங்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.
குறிப்பாக ஒரு சில அழகக சங்கங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
நேர ஒழுங்கு மற்றும் விடுமுறை நாள்களில் செயற்படுவதென தமது சங்க உறுப்பினர்களே இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சுட்டிக்காட்டினர்.
சில சங்க உறுப்பினர்கள் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கும் துணைபோகின்றனர் என்றும், கடமை நேரத்தில் நாகரீகமற்ற முறையிலும் செயற்படுகின்றனர் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.
இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ஆளுநர், விரைவில் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார மருத்துவ அதிகாரிகள், தொழிற்திணைக்களத்தினர், பொலிஸாருடன் கலந்துரையாடலை ஒழுங்கு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
ஒழுங்குமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் அதனைக் கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களால் ஆண்டுதோறும் வியாபார உரிமத்துக்கான கட்டணம் அறவிடப்பட்டாலும், உரிமப் பத்திரம் வழங்கப்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கின்றது என்றும் அழகக சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பதிலளித்தார்.
மேலும் இராணுவத்தினரால் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அழகக நிலையங்கள் இயக்கப்படுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் இராணுவத் தளபதியுடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண அழகக சங்கப் பிரதிநிதிகளுடன் ஒவ்வொரு மாவட்டப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
