இந்திய பாதுகாப்புக்கும், ஸ்திரத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை இலங்கை ஜனாதிபதி தெரிவிப்பு



இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணைப் பயன்படுத்த ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க தெரிவித்தார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கை - இந்தியத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு விசேடமான இடமுள்ளது என்பதைத் தாம் நன்கு அறிவதாகக் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார நினைவுகூர்ந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்துக்காக இந்தியாவைத் தெரிவு செய்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சி அடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.
எதிர்கால நோக்குடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதிய கோணத்தில் கொண்டு செல்லும் வகையில் பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி ஆகிய பிரதான தூண்களைப் பலப்படுத்துவதற்காக இலங்கைக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதும், இரு நாடுகளுக்கும் இடையே மின்சார வலையமைப்பு இணைப்பு மற்றும் பெற்றோலியக் குழாய் இணைப்பை ஏற்படுத்துவது என்பன குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், அநுராதபுரம் ரயில் பாதை சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவது தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தியக் கல்வி ஒத்துழைப்பின் கீழ் அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு மாதாந்தப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
அடுத்த ஐந்து வருடங்களில் 1500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்தியப் பிரதமர் உடன்பாடு தெரிவித்தார்.
தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு, இலங்கையில் விவசாயத்துறை, பால் உற்பத்தித்துறை மற்றும் கடற்றொழில்துறை முன்னேற்றம் என்பவற்றுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க இதன்போது தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் கடல் சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடுதல், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதிய போசன விருந்து வழங்கினார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க அழைப்பு விடுத்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
