ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை எவராலும் முன்வைக்க முடியாது.-- தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவிப்பு

1 year ago



ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை எவராலும் முன்வைக்க முடியாது.மாறாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்திய ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் ஈழத்தமிழர் பிரச்சினையானது பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாற்றமடைந்து வருகின்றது.

இத்தகைய சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியின் பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு சாத்தியமில்லை என்று கூறுகின்றேன்.

2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசின் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

அத்துடன், யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.

இது 'யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன்' என்ற செய்தியைப் பறைசாற்றும் நடவடிக்கையே - என்றார்.