மட்டக்களப்பில் வயலில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை இன்று அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினர் மீட்டனர்

1 year ago


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிடைச்சிமடு, ஆத்துச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை செவ்வாய்க்கிழமை (21) கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் மீட்கப்படு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கைக்காக திங்கட்கிழமை விவசாயிகள் சென்ற நிலையில் வயல்கள் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து வெளியே வரமுடியாமல் சிக்கினர்.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையினை சமூக செயற்பாட்டாளரும் கல்குடா டைவர்ஸின் ஆலோசகருமான முபாறக் ஹாஜியார் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினர் இயந்திர படகுமூலம் குறித்த வயல் பிரதேசங்களுக்குச் சென்று 16 விவசாயிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


அண்மைய பதிவுகள்