வவுனியாவில் க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் சாரதிக்கு தண்டப்பணம் விதித்ததால், தனது வாகனத்தின் மேலதிக உதிரிப் பாகங்களை உடைத்து எறிந்தார்

1 year ago



வவுனியாவில் க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக உதிரிப் பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று (07) இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தனர்.

அந்த வகையில் வவுனியா வைரவப் புளியங்குளம் பகுதியில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த பொலிஸார் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்ததுடன், தண்ட குற்றப் பத்திரத்தையும் வழங்கியிருந்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப்பாகங்களை காலால் அடித்து உடைத்திருந்ததுடன், ஏனைய பாகங்களையும் கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சாரதியின் செயற்பாட்டை வேடிக்கை பார்த்த பொலிசார் அமைதியாக அங்கிருந்து சென்றிருந்தனர்.


 

அண்மைய பதிவுகள்